கொல்கத்தா, ஜூலை 25-
மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்திடும் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான இயக்கங்களை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலக்குழுவின் கூட்டம் கொல்கத்தாவில் உள்ள கட்சியின் அலுவலகமான முசாபர் அகமது பவனில் செவ்வாய், புதன் தேதிகளில் நடைபெற்றது தோழர் பிமன் பாசு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாநிலக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பின்னடைவு ஏற்பட்டிருந்த போதிலும் முன்னணி ஊழியர்கள் தங்களிடமிருந்த பலவீனங்களைக் களைந்து மக்களுடன் நெருக்கமான முறையில் இணைந்து செயல்பட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களின் அடிப்பயில் மக்களைத் திரட்டுவதில் தீவிரமாக இருப்பதாகவும் கூறினார்கள்.
மாநில செயலாளர் சூர்யகாந்த் மிஷ்ரா உரையாற்றும்போது, மக்களுடன் நம் தொடர்பை மீளவும் நெருக்கமான முறையில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலின்போது நம்மைவிட்டுச் சென்று திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் வாக்களித்த மக்களைக் குறிப்பாகத் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றார். நம்முடைய தேர்தல் பின்னடைவு நிரந்தரமானது என்கிற முடிவிற்கு நாம் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆட்சியாளர்களின் ரவுடியிசத்திற்கு ஆளான மாநிலத்தின் பல பகுதிகளில் தேர்தலுக்குப்பின்னர் நாம் நம் கட்சியின் அறைகூவல்களை மிகவும் வலுவான முறையில் மக்களின் மகத்தான ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்ல முடிந்திருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், பாஜகவினர் அவிழ்த்துவிடும் சரடுகள் எல்லாம் விரைவில் அவர்களுக்கு எதிராகத் திரும்பிடும் என்றும் அவர் கூறினார். இன்றைய சூழ்நிலையில் ஆட்சியாளர்களின் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளின் மீது இயக்கங்களைக் கட்டி, மக்களை அவற்றின் கீழ் அணிதிரட்டி, முன்னேறுவதை தொடர்ந்து விடாப்பிடியாக மேற்கொள்வதே இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் நம் கட்சியின் சுயேச்சையான வலிமையை அதிகரித்திட வேண்டியதன் அவசியத்தைவும், அவர் வலியுறுத்தினார். மேலும், பாஜக-விற்கு எதிரானவர்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒரே மேடையின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்றும் அதற்கேற்ற விதத்தில் இடதுசாரிகளின் விரிவான ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீத்தராம் யெச்சூரி
மாநிலக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
மோடி-2 அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்புச்சட்டத்தின் கீழான அமைப்புகள் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய அனைத்தையும் அரித்துவீழ்த்தும் விதத்தில் மிகவும் மூர்க்கமாகச் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் குடிமக்களின் குடியுரிமைகளைப் பறித்திடும் விதத்தில் வேகம் வேகமாக சட்டமுன்வடிவுகளை தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. சங் பரிவாரத்தின்கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தும் முன்னிலும் பன்மடங்குத் தீவிரமானமுறையில் முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் நாம் மக்களுடன் மிகவும் நெருக்கமாக நின்று அவர்களை இவர்களின் நச்சுத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றி, அவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்திட வேண்டியது அவசியமாகும்.
வங்கத்தின் மறுமலர்ச்சி இயக்கத்தின் உண்மையான வாரிசுகள் இடதுசாரிகளாகிய நாம்தான். மறுமலர்ச்சி இயக்கத்தின் மாண்புகள் மாநிலத்தில் மீளவும் உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும். மக்களுடன் மீளவும் இரண்டறக் கலந்து முன்னேற வேண்டும். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் கலந்துறவாடுவதுன், சமூக மேடைகளையும் நமக்குச் சாதகமானமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் மதவெறியை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அரசியலையும் மக்களிடம் விளக்கி, மாநிலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுத்திடக்கூடிய விதத்தில் விரிவான அளவில் மேடைகளை அமைத்தி வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
இவற்றின் அடிப்படையில் கட்சி, செப்டம்பர் மாதத்தில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை மையமாகக்கொண்டும், தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகள் மற்றும் ஸ்தலப் பிரச்சனைகளை முன்வைத்தும் மாவட்ட அளவில் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் இவற்றுக்கு முன்னோடியாக, அடுத்த இரு மாதங்களிலும் மாநிலம் முழுவதும் தீவிரமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்றும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
(கொல்கத்தாவிலிருந்து சந்திப் சக்ரவர்த்தி)